Sunday, May 5, 2013

 Source : http://yogicpsychology-research.blogspot.in/2011/12/blog-post_29.html

சித்த வித்தை கற்க எண்ணும் பலரிற்கு உள்ள தடைகளை கீழ் வருமாறு வகைப்படுத்தலாம் என எண்ணுகிறேன்.

சித்தர்களது நூற்கள் அனைத்துமே பாடல் வடிவில் இருத்தல், அவற்றை புரிந்து கொள்ளும் தன்மையினை சமுகம் இழந்துவிட்டமை. இதற்கு காரணம் எமது பாரம்பரிய கல்வி முறை மாற்றமடைந்தமை, தற்கால கல்வி அறிவுடன் அவற்றை அணுகும் போது அபத்தமான விளைவுகள் பல உண்டாகின்றது. இது கிட்டத்தட்ட நுண்கணித பாடப்புத்தகத்தினை (Calculus text book) சாதரணமான ஒருவன் பார்த்த நிலைதான்.

சித்த வித்தைகள் பற்றிய மாயை,கட்டுக்கதைகள், அற்புதமாக்கல், வியாபாரப்படுத்தப்பட்ட பிரச்சாரங்கள், நோக்கத் தெளிவு இன்மை என்பன. எமது பழைய சமூகம் அகவயப்பட்ட சமூகம், எமது பண்பாடுகள்,கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் அனைத்தும் தன்னையறியும் முறையுடனேயே வடிவமைக்கப்பட்டிருந்தது. பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின் இவை மாறுபட்டு சமூகம் புறவயப்பட்ட சமூகமாக மாறா ஆரம்பித்தது, இப்படி மாற்ற முற்ற சமூகத்தினூடாக பரிமாறப்பட்ட சித்த வித்தைகளும் பல வித கிளைகளாக யோகமுறைகளாக, காப்புரிமை கோரல்களுடன் மேற்கத்தைய முறையில் "புதுப் புது ப்ராடக்ட்" ஆக வடிவம் பெற்று இன்று வேற்று கலாச்சாரத்தவர்கள் மொழியினர்  போற்றும் ஒரு அரிய கலையாக வடிவம் பெற்றுள்ளது. எம்மைப் பொருத்தவரையில் எம்மிடமிருந்துதான் இவையெல்லாம் சென்றது எனத்தெரியும், ஆனால் அவற்றை மூல நூற்களில் விளங்கும் ஆற்றலோ முறைப் படுத்தப்பட்ட கல்வியோ எம்மிடம் இல்லை.

இந்த நிலையில் இவை பற்றிய அதீத கற்பனைகள், புனைவுகள், இவற்றை சாமானியர் கற்க முடியாது என்ற பயமுறுத்தல், ஒரு சாரார் தமக்கு மட்டுமே அவற்றின் உண்மை விளங்கப்படுத்தப் பட்டுள்ளதாக கருதல், நாவல்கள், சினிமாக்களின் எடுத்தாள்கை என்பவற்றினூடாக பெற்ற கருத்தாக்கங்கள் மீண்டும் எம்மவர்களாலேயே எமக்கு இடப்பட்ட தடைகளாக உருப்பெற்றுள்ளன.

இவற்றை அடிப்படையாகக் கொண்டும் தற்காலத்து நடைமுறையில் சித்த வித்தையினை விளங்கிக் கொண்டு உள்ளத்தில்  இலகுவாக பதியும் வண்ணம் அவற்றின் மூலங்களின் சாரம் குறையாதவகையில் கற்பதற்கான ஒரு முயற்சிதான் இந்த சித்த வித்யா பாடங்கள்.

பாடத்தினுள் செல்லமுன் இந்த வகுப்புகளிடையான ஒத்திசைவினை மேம்படுத்த அவற்றின் தன்மை பற்றிய ஓர் அறிமுகம் அவசியமானது என்பதால் இதுவரை நான் பெற்ற பின்னூட்டங்களின் அடிப்படையில் ஒரு சில தெளிவுகளை சுயமாக முன் வைக்கிறேன். இவை தவிர்ந்து மற்றய கேள்விகள் இருப்பின் அவற்றினை பின்னூட்டமிட்டால் அவற்றிற்கான பதில்கள் பின்னூட்டமாகவோ, அடுத்துவரும் பாடங்களிலோ இணைத்துக்கொள்ளப்படும்.

இவற்றை பயில்வதற்கு என்ன தகுதிகள் வேண்டும், பலரும் பயமுறுத்துகின்றனரே? குரு நேரடியாக இல்லாமல் எப்படி இவையெல்லாம் சாத்தியம்? என உங்கள் எண்ண அலைகள் ஓடுவது எமக்கு புரிகின்றது அன்பர்களே! அதற்கு பதில் ஏகலைவன் எப்படி வித்தை கற்றான்? என்பதில் அடங்கியுள்ளது. அதேவழியில்தான் நாமும் கற்க்கப்போகிறோம். ஆர்வமும் கற்க வேண்டும் என்ற தாகமும்தான் ஒரே தகுதி! ஏகலைவன் குருவிற்கே தெரியாமல்தான் அவர் மனதிலிருந்த ஞானத்தினை ஆகர்ஷித்தான், ஆனால் நாம் ஆதி குரு அகஸ்தியரை எப்போதும் மனதில் இருத்தியே இதைத் தொடரப்போகிறோம், நீங்கள் மற்றைய சித்தர்களை குருவாகக் கொண்டவர்களாக இருந்தாலும் பரவாயில்லை. சூஷ்மத்தில் இறைவன், சித்தர்கள் எவருக்கும் எந்தவித வேறுபாடுமில்லை. உங்கள் மனதிற்கு பிடித்த சித்தரையோ, தெய்வத்தினையோ குருவாகக் கொள்ளலாம். அவர்களுடன் சூஷ்ம இணைப்பினை ஏற்ப்படுத்திவிட்டால் பின்பு அவர்கள் சூஷ்ம உடலில் உள்ள குருநாதர், தேவதைகள், ஆகாய மனதுடன் தொடர்பு ஏற்படுத்துவதன் மூலமும் மேலதிக அறிவினை உங்களது நாளாந்த பயிற்சியின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இது எப்படி என்பதனை படிப்படியாக பாடங்களினூடே விளக்கப்படும். இப்படிப் படிப்படியாக பெறும் ஞானத்தின் மூலம் எல்லாக் கேள்விக்குமான விடையினை நீங்களாகவே பெற்றுக் கொள்ளலாம்.
தெய்வ நம்பிக்கை, உபாசனை எதுவும் செய்ய வேண்டுமா? இல்லை, செய்பவராக இருந்தால் அவற்றின் உண்மை விளக்கம், பயன்பாடு என்னவென்பதனை அறிந்து கொள்வீர்கள்.

சித்த வித்தை பற்றி பேசுவதற்கும் அவற்றினைப் பதிவதற்கும் உங்களுடைய தகுதி மற்றும் காரணம் என்ன? அந்த வித்தையிற்குரிய குருபரம்பரையினை தொடர்பு கொண்டு கற்றமையும் குருநாதர் உத்தரவுமே இவற்றிற்கான தகுதியும் காரணமாகும். இவைபற்றிய மேலதிக விளக்கம் அடுத்து வரும் பாடங்களில் விளக்கப்படும்.

இவற்றை பயிற்ச்சி செய்ய விருப்பமில்லை, ஆனால் வாசித்து விளங்க விருப்பமாயுள்ளேன்? நிச்சயமாக, நீங்கள் தொடர்ந்து பலமுறை வாசிக்கும் போது படிப்படியாக மனம் அவற்றை செய்வதற்கான நிலையினை, சூழலை உருவாக்கும். எதுவிதமான தாழ்வு மனப்பன்மையினையோ,பய எண்ணங்களையோ ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். மகிழ்ச்சியாக கற்க்கும் மனநிலையில் அணுகுங்கள். மற்றவற்றை குருநாதர் பார்த்துக் கொள்வார். ஆனால் உங்கள் முயற்சி உண்மையானதாக, உள்ளம் விரும்பி செய்வதாக இருக்க வேண்டும். 

இதுவரையிலான விளக்கங்கள் அடிப்படை தெளிவையும் இவற்றை கற்க்கவேண்டும் என்ற ஆர்வத்தினையும் மனத்துணிவினையும் தந்திருக்கும் என நம்புகிறோம்.

அடுத்து இனிவரும் பதிவுகளில் பதியப்படப்போகின்ற பாடங்களின் ஒழுங்கைப் பார்ப்போம். இவை பாடத்தின் விரிவுகளுக்கேற்ப மாறுபடக்கூடியவை. எனினும் அடிப்படை இவ்வாறே இருக்கும்.

பாடங்களது உள்ளடக்கம்

பாடம்:00 அறிமுகம்
பாடங்களின் தன்மை, நிபந்தனைகள், தகுதி, பக்குவம், குரு பரம்பரை

பாடம்: 01 முத‌ன்மையான‌ மூன்று த‌த்துவ‌ங்க‌ள்

மனிதனின் அமைப்பு, மனிதனின் ஏழு அடிப்படைகள், ஸ்தூல உடல், சூஷ்ம உடல், பிராணன்

பாடம்:02 மான‌ச‌ த‌த்துவ‌ங்க‌ள்

நான்காவ‌தும் ஐந்தாவ‌துமான‌ அடிப்படைகள், இயற்கையுணர்வு மனமும், புத்தியும்

பாடம்: 03 ஆன்ம தத்துவங்கள்
ஆறாவதும் ஏழாவது அடிப்படைகள், ஆன்ம மனம், ஆன்ம ஒளி அல்லது ஆன்ம உணர்வு

பாடம்: 04 மனித கதிர்ப்பு
ம‌னித கதிர்ப்பு, ஆரோக்கிய கதிர்ப்பு, பிராண கதிர்ப்பு, மான‌ச‌ த‌த்துவ‌த்தின் மூன்று கதிர்ப்பு (ஆன்மா, கதிர்ப்பு, கதிர்ப்பின் நிற‌ம், க‌திர்ப்பு உருவாகும் வித‌ம்)

பாட‌ம்: 05 எண்ண‌ங்க‌ளின் இய‌க்க‌விய‌ல்
எண்ண‌ இய‌க்க‌விய‌ல்,எண்ண‌த்தின் இய‌ல்பு, த‌ன்மை, ச‌க்தி, எண்ண‌த்தின் வ‌டிவ‌ம், எண்ண‌த்தின் மூல‌ம் செல்வாக்கு செலுத்துத‌ல், எண்ண‌த்தின் இய‌க்க‌விய‌ல் ப‌ற்றிய‌ இர‌க‌சிய‌ வித்தை கோட்பாடுக‌ள்

பாட‌ம்: 06 தொலைவினுண‌ர்த‌ல், தூர‌திருஷ்டி
தூர‌திருஷ்டி, தூர‌சிர‌வ‌ண‌ம், தொலைவினுண‌ர்த‌ல் ப‌ற்றிய‌ கோட்பாடுக‌ளும் அவ‌ற்றை எப்ப‌டி எம்மில் வ‌ள‌ர்த்துக்கொள்வ‌து

பாடம்: 07 ம‌னித‌ காந்த‌ம்

ம‌னித‌ காந்த‌ம், பிராண‌ ச‌க்தி, அவ‌ற்றின் த‌ன்மைக‌ளும் ப‌ய‌ன்பாடும், அவ‌ற்றை வ‌ள‌ர்ப்ப‌த‌ற்கான‌ ப‌யிற்சிக‌ளும் பிர‌யோக‌ முறைக‌ளும்.

பாட‌ம்: 08 சூட்சும‌ சிகிச்சா முறைக‌ள்
சூட்சும‌ சிகிச்சை, ஆன்ம‌ சிகிச்சை, மான‌ச‌ சிகிச்சை, பிராண‌ சிகிச்சைக‌ளின் கோட்பாடும் பிர‌யோக‌ முறைக‌ளும்

பாட‌ம்: 09 ம‌னோவ‌சிய‌ம் அல்ல‌து ம‌ன‌ ஆற்ற‌ல் மூல‌ம் ம‌ற்ற‌வ‌ரை வ‌ச‌ப்ப‌டுத்துத‌ல்
ம‌னோவ‌சிய‌ம், வ‌சீக‌ர‌ காந்த‌சக்தி, ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் மான‌சீக‌ தாக்குத‌ல்க‌ளை த‌டுக்கும் முறைக‌ள், இந்த‌ ஆற்ற‌லை த‌வ‌றாக‌ ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தால் ஏற்ப‌டும் விளைவுக‌ள்,

பாட‌ம்: 10 சூஷ்ம‌ உல‌க‌ம்
சூஷ்ம‌ உல‌க‌ம், அத‌ன் அமைப்பு, எம‌து சூஷ்ம‌ உட‌ல், சூஷ்ம‌ ச‌க்திக‌ளின் உத‌வி பெற‌ல்

பாட‌ம்: 11 உட‌லிற்கு அப்பால்
ம‌னித‌ உட‌லிலிருந்து உயிர்பிரிந்து இற‌ப்பின் பின் ந‌டைபெறுவ‌து என்ன‌?

பாட‌ம்: 12 ஆன்ம‌ ப‌ரிணாம‌ம்
ஆன்மாவின் ப‌ரிணாம‌ வ‌ள‌ர்ச்சி, எப்ப‌டி வ‌ள‌ர்கிற‌து, அத‌ன் நோக்க‌ம், அத‌ன் இல‌க்கு

பாட‌ம்: 13 ஆன்மீக‌த்தில் கார‌ண‌ காரிய‌ தொட‌ர்பு
வாழ்க்கையில் ந‌டைபெறும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளுக்கான‌ கார‌ண‌ காரிய‌த்தொட‌ர்புக‌ள், வினைக‌ளை விதைத்த‌லும் அவ‌ற்றை அறுத்த‌லிற்கான‌ கோட்பாட்டு விள‌க்க‌ம்,

பாட‌ம்: 14 யோக‌ப்பாதையில் இல‌க்கினை அடைத‌ல்
மூன்று ம‌டிப்புட‌ன் கூடிய‌ முறை (ச‌ரியான‌ முறை, திசை, திட்ட‌ம், சாதனை செய்ய விரும்பும் மாணவர்களுக்கான உப‌தேச‌ங்க‌ளும் ஆர்வ‌மூட்ட‌லும்.

ஸத் குரு பாதம் போற்றி!
குருவானவர் எம்மை சரியான வழியில் நடாத்திச் செல்வாராக!

ஓம் ஸ்ரீ அகத்தீசாய நமஹ:

நன்றி : உயர்திரு.சுமணன் அவர்கள்

Tagged:

0 comments:

Post a Comment